இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான உடன்படிக்கையின்படி நான்கு நாள்கள் போர் நிறுத்தமும் பரஸ்பரம் கைதிகளை விடுவிப்பதற்கும் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி 1:30 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில தகவல்கள் பெறவேண்டியிருப்பதாகவும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் முறை குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை வரை இந்தப் போர் நிறுத்தம் தொடங்காது எனத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கிடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டுவரும் கத்தார் அரசு, போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: 4 நாள்கள் போா் நிறுத்தம்; இஸ்ரேல் - ஹமாஸ் முடிவு!
ஏழு வாரங்களுக்கு மேலாக நீடித்து வந்த இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இந்த உடன்படிக்கை சிறு ஆறுதலாகப் பார்க்கப்பட்டது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, “நாம் போரில் இருக்கிறோம், போரைத் தொடர்வோம். நமது இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கை எட்டப்பட்ட நிலையிலும் இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஜபாலியா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரிய வரவில்லை.