வெள்ளை மாளிகையின் முன்னால் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் செவ்வாய் கிழமை மதியம் அதிக காற்று வீசியதால் கீழே விழுந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக மேற்கு வர்ஜீனியாவின் மோனோங்காஹேலா தேசிய வனப்பகுதியில் இருந்து 40 அடி நார்வே ஸ்ப்ரூஸ் மரம், அதிபர் பூங்கா என்று அழைக்கப்படும் வெள்ளை மாளிகையின் முன்பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடப்பட்டது.
"இந்த கிறிஸ்துமஸ் மரம் செவ்வாயன்று மதியம் 1 மணியளவில் பலத்த காற்று வீசியதில் கீழே விழுந்தது" என்று தேசிய பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
என்பிஎஸ் செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் சாந்தி ஒரு மின்னஞ்சலில், "ஒரு துண்டிக்கப்பட்ட கேபிளை மாற்றிய பிறகு" மாலை 6 மணியளவில் மரம் மீண்டும் நடப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் வெள்ளை மாளிகை முன்பு கிறிஸ்துமஸ் மரம் நடப்படுவது பாரம்பரியமான ஒன்று. இந்த ஆண்டு வைக்கப்பட்ட மரம் புதியது, பழைய மரத்திற்கு பதிலாக இது நடப்பட்டுள்ளது. தேசிய பூங்கா அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், "ஊசி பூஞ்சை" எனப்படும் ஒரு பூஞ்சை நோயால் பழைய மரம் பாதிக்கப்பட்டு அதன் ஊசி போன்ற இலைகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்து விட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் ஒளியூட்ட திட்டமிடப்பட்டது, ஆனால் இன்று நடந்த சம்பவத்தால் அந்நிகழ்வு தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அமெரிக்க தலைநகர கட்டடத்திற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் ஒளியூட்டும் நிகழ்வு செவ்வாயன்று வெற்றிகரமாக நடந்துள்ளது.