ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் அவரின் புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைகளுக்காவும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற யோன் ஃபோஸ்ஸ 'ஃபோஸ்ஸ மினிமலிசம்' என்று அழைக்கப்படும் ஒரு மிகச் சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார்.
wakefullness (வேக்ஃபுல்நெஸ்), melancholia (மெலஞ்சோலியா), the other name (தி அதர் நேம்) உள்ளிட்ட புத்தகங்களுக்காக அதிக கவனம் பெற்றவர். குறிப்பாக, மூன்று நூல்களாக வெளிவந்த இவரின் septology (செப்டாலஜி) நாவலை மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் இலக்கிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம், “வாசகர்களின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் நூல் செப்டாலஜி. இவரது நாவலில் பல இடங்களில் நம் மனதைக் கட்டுப்படுத்துவது போன்ற அதிர்வை வாசகர்களுக்குக் கடத்துகிறது. ஒரு எழுத்தாளர் எழுதுகையில் இது போல் தெளிந்த சிந்தனையில் பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுவது என்பதை நினைப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஃபோஸ்ஸவைப் படிக்காதவர்கள் என்னவென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒன்றை இழக்கிறார்கள். இவர் நோபல் பரிசு பெறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
விருது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோன் ஃபோஸ்ஸ, “ விருதைப் பெருவதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் சற்று பயமாகவும் இருக்கிறது. மாற்றுக் கருத்திற்கு இடமில்லாமல் இது இலக்கியத்திற்காக வழங்கப்படும் முதன்மையான விருது” எனக் கூறியுள்ளார்.
64 வயதான யோன் ஃபோஸ்ஸ 40 மேற்பட்ட நாடகங்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என இலக்கிய துறையில் பல பங்களிப்பைச் செய்திருக்கிறார்!