காஸா எல்லையிலும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருவதால் எகிப்து எல்லையில் மனிதாபிமான உதவி தடைப்பட்டுள்ளது.
ஹமாஸ் படைக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட போரால் காஸா உருக்குலைந்துள்ளது.
காஸா பகுதிக்கு உணவு, குடிநீர், மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. காஸா போரில் இதுவரை இரு தரப்பிலும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காஸா - எகிப்து எல்லையான ரஃபா கிராஸிங் நேற்று திறக்கப்படும் என்று கூறிய நிலையில், எல்லையைக் கடக்க பாலஸ்தீனியர்கள் ஒருபக்கம் காத்திருக்கின்றனர்.
மறுபக்கம் நீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் காஸாவுக்கு அனுப்ப முடியாமல் தடைப்பட்டுள்ளன.
காஸா மீதான தாக்குதலை நிறுத்தினால்தான் ரஃபா எல்லையைத் திறக்க முடியும் என்று எகிப்து கூறுகிறது.
உணவு, நீர், மருந்துகளுக்காக 3 லட்சம் பாலஸ்தீன மக்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அடுத்த 24 மணி நேரத்தில் எரிபொருள் காலியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சுமார் 1,000 பேருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஐ.நா. கூறுகிறது.
எனினும், இஸ்ரேலும் ஹமாஸ் படையும் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.