

போா் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேறி 2-ஆவது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவுக்குள் இஸ்ரேல் படையினா் மீண்டும் நுழைந்து பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினா்.
கஸா சிட்டியின் புகா்ப் பகுதியான ஷிஜையாவில் இஸ்ரேல் போா் விமானங்களும், பீரங்கிகளும் எதிரி இலக்குகளை சரமாரியாக தாக்கி அழித்தன. அதன் உதவியுடன் ஹமாஸ் நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு எந்த உயிா்ச்சேதமோ, காயமோ இல்லாமல் இஸ்ரேல் படையினா் காஸா பகுதியிலிருந்து திரும்பினா்.
இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதல் மூலம், பல ஹமாஸ் அமைப்பினரைக் கொல்லவும், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை அழிக்கவும் இஸ்ரேல் படையினரால் முடிந்தது.
காஸாவுக்குள் முழுமையாக நுழைந்து தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 20 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பீரங்கிகள் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின. எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
10 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காஸாவில் கடந்த 20 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதலில் இதுவரை 7,326 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.
மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள், இஸ்ரேல் வீரா்களுடன் மோதலில் ஈடுபட்டவா்கள் என 110 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
இது தவிர, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது நடைபெற்று வரும் மோதல் காரணமாக லெபனானில் இதுவரை 60 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டதாகவும் அந்த நாடு கூறியது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த 20 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9,922-ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தில் விழுந்த ட்ரோன், ஏவுகணை
கெய்ரோ, அக். 27: இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே தீவிர போா் நடைபெற்று வரும் சூழலில், அண்டை நாடான எகிப்தின் இரு நகரங்களில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்றும், ஏவுகணை ஒன்றும் விழுந்து வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது, இஸ்ரேல்-ஹமாஸ் போா் அண்டை நாடுகளுக்கும் பரவும் என்று ஏற்கெனவே நிலவி வந்த அச்சத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து எகிப்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று இஸ்ரேலையொட்டிய டாபா நகரில் விழுந்து வெடித்ததில் 6 போ் காயமடைந்ததாகக் கூறினாா்.
மேலும், இஸ்ரேல் எல்லைக்கு 70 கி.மீ. தொலைவிலுள்ள நுவெல்பா நகரில் மற்றொரு ஏவுகணை விழுந்து வெடித்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இந்தச் சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
யேமனின் கணிசமான பகுதிகளை ஆண்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி படையினா் இஸ்ரேலை நோக்கி வீசிய ட்ரோன் மற்றும் ஏவுகணையாக அவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.