செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய ஒரு நுண்ணோக்கியை கூகுள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை இணைந்து உருவாக்கியுள்ளது.
இது மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
செய்யறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அடுத்த சில ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவத் துறையில் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய வகையில் செய்யறிவு தொழில்நுட்பத்துடன்(AI) கூடிய ஆக்மென்டடு ரியாலிட்டி மைக்ரோஸ்கோப் (Augmented Reality Microscope) உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை இணைந்து இயந்திரக் கற்றல்(Machine Learning), ஆக்மென்டடு ரியாலிட்டி(Augmented Reality) தொழில்நுட்பத்த்தை இணைத்து இதனை உருவாக்கியுள்ளது.
புற்றுநோயில் மருத்துவர்கள் கண்டறிய முடியாத அசாதாரண விஷயங்களைக்கூட இது கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் புற்றுநோயை மருத்துவர்கள் உறுதி செய்தாலும் இரண்டாவது கருத்தை அதாவது நோயின் துல்லியத்தன்மையை அளிக்கும். இது மருத்துவ நோயியல் நிபுணர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் சியாட்டில் மருத்துவர்கள் இதனை சோதனை செய்து வெற்றிகரமான முடிவையும் பெற்றுள்ளனர்.
மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை மேம்படுத்த செய்யறிவு தொழில்நுட்பத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.