இந்தியா - கனடா உறவில்விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், 2018 - 2023ஆம் ஆண்டு வரை 1.6 லட்சம் இந்தியர்கள் கனடாவில் குரியுரிமை பெற்றிருப்பதாக வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
அதாவது, இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றிருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று அங்கு குடியுரிமை பெற அதிகம் விரும்பும் நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், முதல் இடத்தில் வழக்கம் போல அமெரிக்காவில் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற 8.4 லட்சம் இந்தியர்கள், கிட்டத்தட்ட 114 நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 58 சதவீதம் பேர் அமெரிக்கா அல்லது கனடாவில் குடிபெயர்ந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் மடும் 87,000 இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். 2020 கரோனா காலத்தைத் தவிர, தொடர்ந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.
இதையும் படிக்க..கரோனாவைவிட கொடூரமான வைரஸ்.. எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்
ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் நன்கு வளர்ந்த நாடுகளில் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்வதில் அதிகமான இந்தியர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.
தரமான வாழ்முறை, தங்கள் பிள்ளைகளுக்கு சர்வதேச கல்வி, வேலைவாய்ப்பு, தரமான சுகாதாரம் போன்றவை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் கிடைப்பதாலும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதாலும், பலரும் நன்கு வளர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இந்தியர்கள் பலரும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற முனைவது குறித்து அரசு கவனத்தில் கொண்டுள்ளது, இங்குள்ள மக்களின் திறமைகள் மற்றும் அவற்றின் நன்மைகளை உள்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.