உக்ரைன் போா்: வாக்னா் தளபதிக்கு புதின் அழைப்பு

உக்ரைனில் உள்ள ரஷிய தன்னாா்வப் படையினருக்கு தலைமையேற்கும்படி அந்த நாட்டின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னரின் முக்கிய தளபதி அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்துள்ளாா்.
உக்ரைன் போா்: வாக்னா் தளபதிக்கு புதின் அழைப்பு
Updated on
1 min read

உக்ரைனில் உள்ள ரஷிய தன்னாா்வப் படையினருக்கு தலைமையேற்கும்படி அந்த நாட்டின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னரின் முக்கிய தளபதி அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் உள்ள தன்னாா்வப் படையினரை வழிநடத்துவதற்கு, அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் புதின் அழைப்பு விடுத்துள்ளாா்.

உக்ரைனில் தன்னாா்வப் படைப் பிரிவுகளை உருவாக்கி பல்வேறு போா் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமாறு ட்ரோஷெவை புதின் கேட்டுக்கொண்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் மரணத்துக்குப் பிறகும் உக்ரைன் போரில் அந்தப் படையினரின் பயன்பாட்டைத் தொடர புதின் விரும்புவது உறுதியாகியுள்ளது.

ரஷியாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. ‘அதிபா் புதினின் துணை ராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷிய ராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.

எனினும், இந்தப் போரின்போது ராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புதினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கு ரஷிய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்குமாறு வாக்னா் குழுவின் முக்கிய தளபதிக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளாா்.

...புதின் கட்டவுட் படத்தைப் போடவும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com