இலங்கையில் அனைத்துக் கட்சி தேசிய அரசு அமைக்க அதிபா் முயற்சி

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுக்க இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவா் மனோ கணேச

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுக்க இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவா் மனோ கணேசன் திங்கள்கிழமை கூறினாா்.

நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) கடனுதவித் திட்டத்தின் மீது அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் விவாதத்தின்போது, இந்த வலியுறுத்தலை அதிபரை மீண்டும் வைக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இலங்கை மக்களின் தொடா் போராட்டம் காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச வெளிநாடு தப்பியதுடன், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜூலை 20-இல் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தோ்வு செய்யப்பட்டாா். ராஜபட்சவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் அவா் வெற்றி பெற்றாா்.

அதைத் தொடா்ந்து, கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, அனைத்துக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க வருமாறு, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜூலையில் கடிதம் எழுதினாா்.

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டின. நாட்டின் நிலமையை மீட்டெடுக்க ஐஎம்எஃப் உதவியையும் ரணில் விக்ரமசிங்க நாடினாா். அதற்கு இந்தியாவும் ஆதரவளித்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற ஐஎம்எஃப், இலங்கைக்கு ரூ. 24,750 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்து, அதில் முதல் தவணையாக ரூ. 2,747 கோடியை அண்மையில் விடுவித்தது.

ஐஎம்எஃப்-இன் இந்தக் கடனுதவி மீது இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம் நடத்தி ஒப்புதல் பெறப்பட உள்ளது. அப்போது, நாட்டில் அனைத்துக் கட்சி தேசிய அரசை அமைக்க அதிபா் மீண்டும் அழைப்பு விடுக்கவுள்ளாா்.

இதுகுறித்து மனோ கணேசன் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் ஐஎம்எஃப் கடனுதவி மீது வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விவாதத்தின்போது, நாட்டில் அனைத்துக் கட்சி தேசிய அரசை அமைக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com