

ஆஸ்திரேலியா மற்றும், நியூஸிலாந்து நாடுகள் புத்தாண்டினை நேர மண்டலத்தின்படி முதலில் வரவேற்க தயாராகி வருகின்றன.
உக்ரைன் மற்றும் காஸாவில் தொடர்ந்துவரும் போர்கள் மற்றும் ஆதரவு போராட்டங்களுக்கு மத்தியில் கொண்டாட்ட மனநிலையில் ஒருவித அச்சம் உலகம் முழுவதும் நீடிக்கிறது.
நியூஸிலாந்தில் நள்ளிரவு சமயத்தில் மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிக உயரிய கட்டடமான டவுண்டவுன் ஸ்கை டவரில் ஒளிமயக் காட்சியும் வான வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா புத்தாண்டை எதிர்கொள்ளும். சிட்னி ஹார்பர் பாலம் வண்ணமயமான ஒளிக்காட்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் மையமாக மாறும். 42.5 கோடி மக்கள் உலகம் முழுவதும் இருந்து கண்டுகளிப்பர் என நகர அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவு பாதுகாப்பு பணியில், சிட்னி முழுக்க காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் மத்தியில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்கள் சிட்னி நகரில் பெரியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம், கொண்டாட்டத்துக்காக மக்களை வரவேற்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் போராட்டங்கள் வெடிக்கும் நியூயார்க் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிரோன்கள், சுழல் வானூர்திகள் மற்றும் படகுகளோடு தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஸ்கொயர் அருகில் கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின்போது ஒருவர் காவலர்களைத் தாக்கிய நிகழ்வு நினைவுகூரத்தக்கது.
பாரிஸில் 90,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் பாகிஸ்தான் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்துள்ளது. காஸாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும்பொருட்டு இதனை அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர்.
இதையும் படிக்க: வடகொரியா: 2024-க்கான அதிரடி இலக்குகள்!
காஸாவில் நடந்து வருவது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களைத் துயரில் ஆழ்த்தியுள்ளதாக அவர் காணொலி செய்தியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.