தென்கிழக்கு ஆசிய பகுதிகள் தங்களது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தி புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக புற்றுநோய் தினம் இன்று (பிப்ரவரி 4) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலக புற்றுநோய் தினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலகின் பல நாடுகளும் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் தென்கிழக்கு ஆசிய பகுதிகள் தங்களது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தி புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில் கூறியிருப்பதாவது: புற்றுநோய்க்கான மருத்துவ சேவைகளை அதிக அளவிலும் , தரமான முறையிலும் உலக நாடுகள் வழங்க வேண்டும். உலகில் மக்கள் அதிகம் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக இந்தப் புற்றுநோய் இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோயினால் உலகம் முழுவதும் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2010 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில் உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே காலக் கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் உயிரிழப்புகள் புகையிலை பயன்பாடு, அதிக அளவிலான உடல் பருமன், ஆல்கஹால், காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வது மற்றும் போதிய உடற்பயிற்சி மேற்கொள்ளாதது போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 20 லட்சத்துத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 லட்சத்துத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.