/

இந்தியாவின் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்: துருக்கி நாட்டு தூதர் உருக்கம்!

பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 11:29 am

DIN

அங்காரா: பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நேற்று முன்தினம் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தகவல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவிக்கரம் நீட்டியது. 

இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு மருத்துவப் பொருள்களுடன் ராணுவ மருத்துவக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் உள்பட மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா செவ்வாய்க்கிழமை மதியம் அனுப்பியது. 

முதல் விமானம் துருக்கியில் உள்ள அதானாவை அடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

மற்றொரு கூடுதல் ராணுவ மருத்துவக் குழு செவ்வாய்க்கிழமை மாலை சிரியாவின் டமாஸ்கஸுக்கு புறப்பட்டது, அதே நேரத்தில் மருத்துவப் பொருட்களுடன் டமாஸ்கஸுக்கு விமானம் இரவு தாமதமாகப் புறப்பட்டது. மேலும் இரண்டு குழுக்களை தயார் நிலையில் உள்ளது.

99 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளதாக இந்திய ராணுவம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மருத்துவக் குழுவில் எலும்பியல் அறுவை சிகிச்சைக் குழு, பொது அறுவை சிகிச்சை நிபுணர் குழு, மற்ற மருத்துவக் குழுக்களைத் தவிர மருத்துவ நிபுணர் குழுக்கள் உள்ளிட்ட முக்கியமான பராமரிப்பு சிறப்புக் குழுக்களும் சென்றுள்ளன." என்று அது கூறியது.

30 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதியை நிறுவுவதற்கு எக்ஸ்ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள், இருதய கண்காணிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களும், முதலுதவி மருந்துகள் இந்த குழுக்களுடன் அனுப்பப்பட்டுள்ளன. 

“ஒவ்வொரு குழுவிலும், ஐந்து பெண் மீட்புப் பணியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் துணை மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுடன் சில வாகனங்கள், குறிப்பாக இலகுரக வாகனங்களை இரண்டு குழுக்களுடனும் அனுப்பியுள்ளதாகவும்,  அனைத்து குழு உறுப்பினர்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.” என்று தேசிய பேரிடர் மீட்புப் படை டிஐஜி (செயல்பாடுகள்) மொஹ்சென் ஷாஹிடி கூறினார்.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என்றும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 'தோஸ்த்' அல்லது நண்பன் என்ற பழமொழியைப் பகிர்ந்துள்ளார், இது துருக்கி மற்றும் இந்தியில் பொதுவான வார்த்தையாகும். துருக்கியில் ஒரு பழமொழி உண்டு, "ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்'. மிக்க நன்றி இந்தியா," என்று துருக்கி நாட்டு தூதர் ஃபிரத் சுனெல் தெரிவித்துள்ளார். 

"Dost" is a common word in Turkish and Hindi... We have a Turkish proverb: "Dost kara günde belli olur" (a friend in need is a friend indeed).
Thank you very much

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.