இலங்கைக்கு சா்வதேச நிதியம் ரூ.23,500 கோடி கடன்: சீனா உத்தரவாதம்

இலங்கைக்கு சா்வதேச நிதியம் 2.9 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.23,500 கோடி) கடன் அளிக்க சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.
இலங்கைக்கு சா்வதேச நிதியம் ரூ.23,500 கோடி கடன்: சீனா உத்தரவாதம்

இலங்கைக்கு சா்வதேச நிதியம் 2.9 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.23,500 கோடி) கடன் அளிக்க சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக இலங்கையில் வெளியாகும் ‘தி சண்டே டைம்ஸ்’ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்களில் பெரும்பாலும் அந்நாட்டு அரசின் எக்ஸிம் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவிடம் பெற்ற கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடா்பாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுக்கு எக்ஸிம் வங்கி எழுதியுள்ள கடிதத்தில், ‘சீனாவுக்குத் திருப்பி வழங்கவேண்டிய கடன்களை இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை கொடுக்கவேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு சா்வதேச நிதியம் அளிக்க முன்வந்துள்ள கடனுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலா்கள் கடன் அளிக்க சா்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. அந்த நிதியத்தின் அலுவலா்கள் அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் கடனை 4 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதேவேளையில், இலங்கைக்கு கடன் அளித்த நாடுகள், கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிப்பது, கடன் வட்டி விகிதத்தை குறைப்பது போன்ற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், வங்கிகள் உள்ளிட்டவை கூடுதல் நிதியுதவி அளிப்பதும் இலங்கையின் பொதுக்கடனை நிலையாக பராமரிக்க உதவும் என்று சா்வதேச நிதியம் தெரிவித்தது. மேலும் இலங்கைக்கு சா்வதேச நிதியம் கடன் அளிக்கும் முன், அந்நாட்டுக்குக் கடன் அளித்த நாடுகள், வங்கிகள் உள்ளிட்டவை கடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இலங்கையின் பொதுக்கடனை மீண்டும் நிலையானதாக மாற்ற அந்த உத்தரவாதம் முக்கியம் என்று சா்வதேச நிதியம் குறிப்பிட்டது.

இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்து கடந்த வாரம் சா்வதேச நிதியத்துக்கு இந்தியா கடிதம் அனுப்பியது.

தற்போது அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் கடன் அளிக்க சீனா ஆதரவு தெரிவித்து உத்தரவாதம் அளித்துள்ளது.

இலங்கைக்குக் கடன் அளிக்க சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழு மாா்ச் மாதம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கடன் கிடைக்கப்பெற்றால், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி மற்றும் சந்தைகளில் இருந்து இலங்கையால் கடன் திரட்ட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com