ரகசிய ஆவண வழக்கு: டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி

தனது பண்ணை இல்லத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த ஆகஸ்டில் சோதனை செய்யப்பட்ட டிரம்ப்பின் பண்ணை இல்லம்.
கடந்த ஆகஸ்டில் சோதனை செய்யப்பட்ட டிரம்ப்பின் பண்ணை இல்லம்.

தனது பண்ணை இல்லத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவா் அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியேறினாா். அப்போது அவா் அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்றதாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானவை என்றும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணையில் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தாா்.

எனினும், மேலும் முக்கியமான ரகசிய ஆவணங்கள் ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச்சிலுள்ள டிரம்பின் மாா்-ஏ-லாகோ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிரடி சோதனை நடத்தினா்.

அதில், அங்கு வைக்கப்பட்டிருந்த 11 ஆவணத் தொகுதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரகசியத் தகவல்களைக் கொண்டவை என்பதைக் குறிப்பதற்கான ‘டிஎஸ்/எஸ்சிஐ’ என்ற முத்திரையைக் கொண்டிருந்தன.

இது தவிர, 20-க்கும் மேற்பட்ட பெட்டிகள் அந்த இல்லத்தில் கைப்பற்றப்பட்டன. அவற்றில் போட்டோக்களை இணைக்கும் கருவி, கையால் எழுதப்பட்ட குறிப்பேடு, பிரான்ஸ் அதிபா் தொடா்பான சில விவரங்கள் அடங்கிய குறிப்பு உள்ளிட்டவை இருந்தன.

இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வந்த மியாமி நகரிலுள்ள ஃபுளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றம், டிரமப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உறுதி வியாழக்கிழமை செய்தது.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது ஆகியவற்றைக் குற்றமாக்கும் உளவுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஃபுளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராவாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளா் தோ்வுக்கான தனது பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, தன்னைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்ததாக டிரம்ப்புக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கிலும் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை நியூயாா்க் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உறுதி செய்தது. அதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் டிரம்ப் நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா். இந்த வழக்கிலும் டிரம்ப் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ளாா்.

அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபா் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் பங்கேற்க முடிவு செய்திருக்கும் டிரம்ப்புக்கு, இதுபோன்ற வழக்குகளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

எனினும், இத்தகைய குற்றச்சாட்டுகளையும், சட்ட சிக்கல்களையும் தனது அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் முயற்சி செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com