ஐக்கிய அரபு நாடுகளிலுள்ள அஜ்மான் நகரில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை, கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
உடனடியாக, நடமாடும் காவல்துறை வாகனம், தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, தீ விபத்தில் பாதிப்புக்குள்ளான விவரங்களை பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
ஐக்கிய அரபு நகரங்களில் அண்மைக்காலமாக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உள்கட்டமைப்பு அமைச்சகம் புள்ளிவிவரத்தோடு கவலை தெரிவித்திருந்த மூன்றாவது நாளில் இந்த தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.