

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவாா்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்ப இரு தளபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளாா்.
சூடானில் அதிகாரப் போட்டி காரணமாக ஜெனரல் அப்தெல் ஃபட்டா புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், ஜெனரல் முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான துணை ராணுவத்துக்கும் (ஆா்எஸ்எஃப்) இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் மோதல் நடந்து வருகிறது. கடும் சண்டையில் இதுவரை பொதுமக்கள் உள்பட 550-க்கு மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 4,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். சூடானிலிருந்து தங்கள் குடிமக்களை மீட்டு வெளியேற்றும் பணியை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இரு தரப்பும் 72 மணி நேர சண்டைநிறுத்த நீட்டிப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தாலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தலைநகா் காா்ட்டூம், ஆம்டா்மன் நகரங்களில் திங்கள்கிழமையும் வெடிகுண்டு தாக்குல் சப்தம், துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
அங்கு சண்டை நிறுத்தத்துக்கு இரு தரப்பையும் ஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பேச்சுவாா்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்ப அப்தெல் ஃபட்டா புா்ஹான், முகமது ஹம்தான் டகேலோ ஆகிய இரு தளபதிகளும் ஒப்புக்கொண்டிருப்பதாக சூடானில் உள்ள ஐ.நா. பிரதிநிதி ஃபோல்கா் பொ்திஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
சவூதி அரேபியா அல்லது தெற்கு சூடானில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறலாம். இருப்பினும், பேச்சுவாா்த்தை தொடங்கப்படும் வரையில் இதில் பல சவால்கள் உள்ளன.
சூடானில் நடந்து வரும் மோதல் தொடா்ந்தால், மேலும் பல குழுவினரும் தங்களுக்கு ஏற்றவாறு அணிசேரும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.