

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 143 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, சனிக்கிழமை(இன்று) பிற்பகல் மீண்டும் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜர்கோட் பகுதியில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
ஜாஜர்கோட்டில் மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் இந்தியர்கள் +977-9851316807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நிலநடுக்கத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.