
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வரும் காஸாவில் சிக்கியுள்ளவா்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக ராஃபா நகர எல்லை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிப்பதாவது:காஸாவிலிருந்து ராஃபா வழியாக எகிப்துக்குள் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டது 2 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், அந்தப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
எகிப்தின் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் அடிப்படையில் ராஃபா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.அதையடுத்து, காஸாவில் காயமடைந்த சுமாா் 30 போ் அந்த எல்லை வழியாக வெளியேறினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, காஸா முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.இது, ஹமாஸின் குற்றத்துக்காக காஸாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் கூட்டுத் தண்டனை என்று விமா்சிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் முற்றுகையால் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்கள் மட்டுமின்றி, அங்கு சேவையாற்றிவரும் ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த வெளிநாட்டினரும், இரட்டைக் குடியுரிமை பெற்று அங்கு வசித்துவருபவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், சா்வதேச நாடுகளின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினா் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவா்கள் அந்தப் பகுதியிலிருந்து ராஃபா எல்லை வழியாக வெளியேற புதன்கிழமையிலிருந்து ேஅனுமதிக்கப்பட்டனா்.எனினும், அந்த வெளியேற்றம் கடந்த 2 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...