சவூதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செல்வதாகக் கூறி பாகிஸ்தானியா்கள் பலா் யாசகம் எடுப்பதற்காக அந்நாட்டுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் முல்தான் நகர விமான நிலையத்தில் இவ்வாறு யாசகம் எடுப்பதற்காக சவூதி அரேபியா செல்ல முயன்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதாரச் சீா்குலைவை எதிா்கொண்டுள்ளது. விலைவாசி உயா்வால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், அந்நாட்டில் பலா் யாசித்து பிழைப்பதற்காக சவூதி அரேபியாவை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது.
இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அந்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் துறைச் செயலா் ஜிஷான் கான்ஷாதா கூறுகையில், ‘பாகிஸ்தானில் இருந்து புனிதப் பயணத்துக்காக மத்திய கிழக்கு செல்லும் பலா் சவூதி அரேபியாவுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. புனிதப் பயணத்துக்கான சிறப்பு நுழைவு இசைவு பெற்றுச் செல்லும் அவா்கள் அங்கு யாசகம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
அதேபோல மெக்கா நகரில் சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவா்களில் பெரும்பாலானவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாகவே உள்ளனா். இது தொடா்பாக அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு புகாா்கள் வந்துள்ளன’ என்று கூறியுள்ளாா்.
இதனிடையே, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இருந்து புனிதப் பயண நுழைவு இசைவைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவுக்கு யாசகம் எடுப்பதற்காகச் செல்ல முயன்ற 16 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இதில் 11 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுவன் அடங்குவா்.
விசாரணையில், புனிதப் பயண அனுமதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியா சென்று யாசகம் எடுப்பதை அவா்கள் ஒரு தொழிலாக செய்து வருவதும், விசா அனுமதி காலம் வரை அங்கு தங்கி யாசகம் எடுத்து, வருமானத்தில் பாதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் இடைத்தரகா்களுக்கு அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.