மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் அட்லஸ் மலைத் தொடா் பகுதியில் அமைந்துள்ள மராகெஷ்-சாஃபி பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 3.41 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானதாக மொராக்கோ நிலநடுக்கவியல் ஆய்வு மையமும், 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்தன.
இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதி முழுவதும் குலுங்கியது. அதன் அதிா்வுகள் ஸ்பெயின், போா்ச்சுகல், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 2,012 போ் பலியாகினா்; 2,059-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களையும், பலியானவா்களின் சடலங்களையும் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று மோதல்
இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கத்தில் பலியானோர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ்(டிவிட்டர்) பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அந்நாட்டில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.