
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும் எனக் குடியரசுக் கட்சியின் போட்டியாளா் விவேக் ராமஸ்வாமி தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவுஇசைவை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்தியா, சீன நாட்டினா் அந்த நுழைவுஇசைவு நடைமுறையால் அதிகம் பலனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், ஹெச்1பி நுழைவுஇசைவு வழங்கப்படும் தற்போதைய நடைமுறைக்கு குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான விவேக் ராமஸ்வாமி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
தனியாா் தொலைக்காட்சிக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘லாட்டரி முறையைப் போன்றே ஹெச்1பி நுழைவுஇசைவு நடைமுறை உள்ளது. அந்த நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக, திறமையை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டுப் பணியாளா்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் தேவைக்கு ஏற்ப திறன்மிக்க வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு நுழைவுஇசைவு வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.
ஹெச்1பி விசா நடைமுறைக்கு எதிராக விவேக் ராமஸ்வாமி கருத்து தெரிவிப்பது இரண்டு நாள்களில் இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, மற்றொரு செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அவா் அளித்திருந்த பேட்டியில், ‘‘ஹெச்1பி நுழைவுஇசைவு நடைமுறை சரிவர இல்லை.
பணியாளா்களின் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரான பிறகு, ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’’ என்றாா்.