
24 மணி நேரத்தில் தங்கள் தீவை நோக்கி 103 போா் விமானங்களை சீனா பறக்கச் செய்ததாக தைவான் குற்றஞ்சாட்டியது.
இது குறித்து தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தைவானை நோக்கி சீன விமானங்கள் அத்துமீறி பறக்கவிடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணியிலிருந்து, திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் தைவானை நோக்கி பறந்து வந்த சீன விமானங்களின் எண்ணிக்கை 103 ஆகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.
தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்; அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு முக்கிய தலைவா் சென்றாலோ, தைவான் தலைவா்கள் அரசு முறைப் பயணம் வர பிற நாடுகள் அனுமதித்தாலோ அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்தச் சூழலில், 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி 103 சீன போா் விமானங்கள் தற்போது பறக்கவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.