சூரிய கிரகணத்தின்போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் திங்கள்கிழமை காரில் பயணிக்கும்போது சக காரோட்டிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய பெண்ணை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கைதான பெண், ”சூரிய கிரகணத்தின்போது கடவுள் செய்ய சொன்னார், நான் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
22 வயதான டெய்லன் நிச்சல் செலஸ்டின், ஜியார்ஜியாவை சேர்ந்தவர். அவர் தங்கியிருந்த நெடுஞ்சாலை விடுதியிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டவர், விடுதி சிப்பந்தியிடம் கடவுள் வழிகாட்டும் துப்பாக்கிச்சூடுக்கு செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார்.
காரில் பயணிக்கும்போது தன்னை கடக்கிற மற்றொரு காரை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த காரின் கண்ணாடி சேதமடைந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட போதும் காரை அவரால் இயக்க முடிந்திருக்கிறது.
அதே போல சில மைல் தொலைவில் இன்னொரு காரின் ஓட்டுநரையும் செலஸ்டின் தாக்கியுள்ளார். அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணைக் கைது செய்த காவல்துறை அவரை ஹோம்ஸ் கவுண்டி சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது.
அந்த பெண்ணிடமிருந்து ஏஆர்-15 வகை ரைபிள் ஒன்றும் 9 எம்எம் கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.