ராஃபா, காஸா: காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்துக்கு எதிரான தனது தாக்குதலை ஏறத்தாழ ஏழாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது இஸ்ரேல். ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ராஃபாவின் புறநகர்ப் பகுதியில் தெல் சுல்தான் பகுதியில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதாக காஸா மக்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 6 குழந்தைகள், இரு பெண்கள், ஓர் ஆண் ஆகியோரின் உடல்கள், ராஃபாவின் அபு யூசுப் அல்நஜார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனை வளாகத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு அழுதுபுரண்டனர். மற்றவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இடம் பெயர்ந்தவர்கள் இருந்த குடியிருப்பின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் எல்லாரும் குழந்தைகளும் பெண்களும்தான், போராளிகள் அல்லர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
எகிப்து நாட்டின் எல்லையையொட்டியுள்ள ராஃபா நகரில் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்து வசிக்கின்றனர்.