காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

தூர்தர்சன் இலச்சினையின் நிறம் சிவப்பிலிருந்து காவிக்கு மாற்றப்பட்டிருப்பது பற்றி...
காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

இந்திய அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்சனின் இலச்சினையின் நிறம் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைக் காவிமயமாக்கும் முயற்சி என்று பலரும் குரலெழுப்ப, புதிய அவதாரம் என்பதாக விளக்கமளித்திருக்கிறது தூர்தர்சன்.

தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது பற்றி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் அறிவித்துள்ளது.

எங்கள் விழுமியங்கள் எப்போதும் போலவே தொடரும் வேளையில், நாங்கள் இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளோம். முன்னெப்போதுமில்லாத செய்திப் பயணத்துக்குத் தயாராகுங்கள்... அனைத்து புதிய டிடி செய்திகளை கண்டு நுகருங்கள்! என்பதாகச் சில நாள்களுக்கு முன் அறிவித்திருக்கிறது தூர்தர்சன்.

ஆனால், இதைத் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனைக் காவிமயமாக்கும் முயற்சி என்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

தூர்தர்சன் காவிமயமாவைக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி! என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜவாஹர் சர்க்கார்.

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் தமிழ் ஒளிபரப்பின் பெயரைப் பொதிகை என்பதிலிருந்து டிடி (தூர்தர்சன்) தமிழ் என்று மாற்றப்பட்டபோது, இலச்சினையும் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com