கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் வானம் செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. சஹாரா பாலைவனத்தில் எழும் தூசுக்களினால் இந்த புழுதி புயல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரீஸ் அதிகாரிகள் சூரிய ஒளி மற்றும் பார்வை தெரிவுநிலை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். தூசுக்களின் செறிவு காரணமாக மாசுபாடு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் தெரித்துள்ளனர்.
இதுபோல ஆரஞ்சு பனிபடலத்தால் சூழப்படும் நகரம் ஏதென்ஸ் மட்டும் கிடையாது. சஹாராவில் இருந்து அடித்து வரப்பட்ட தூசுக்கள் கிரீஸ் நாட்டின் மற்ற நகரங்களையும் சூழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2018-க்குப் பிறகு நாட்டைத் தாக்கும் மோசமான புழுதி புயல் இது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தெற்கிலிருந்து பல நாள்களாக பலத்த காற்று வீசியதற்கு பிறகு மஞ்சள்- ஆரஞ்சு பனிப்படலம் பல்வேறு இடங்களில் மூடி, பார்வை தெரிவுநிலையை மட்டுப்படுத்தியுள்ளது. சுவாச கோளாறுகளுக்கும் காரணமாகியுள்ளது.
ஏதென்ஸ் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கோஸ்டாஸ் லகோவர்டாஸ், “மார்ச் 21-22, 2018 க்குப் பிறகு சஹாராவில் எழுந்துள்ள தூசுக்கள் மற்றும் மணல் செறிவுகளின் மோசமான புயல் இது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புழுதி புயல் ஐரோப்பாவின் எல்லை வரை சென்றுள்ளது. தெற்கு பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை வானம் தெளிவாக இருந்தததாக கிரீஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தெற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் பருவமில்லாத வேளையில் காட்டுத்தீ ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் 25 இடங்களில் தீப்பற்றியதாக தீயணைப்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.