வங்கதேச இடைக்கால அரசு இன்று பதவியேற்பு: மறுகட்டமைப்புக்கு முகமது யூனுஸ் அழைப்பு

வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முகமது யூனுஸ்
முகமது யூனுஸ்
Published on
Updated on
2 min read

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறியதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் வியாழக்கிழமை (ஆக. 8) பதவியேற்கிறாா்.

இதையடுத்து, அன்பு மற்றும் அமைதி வழியில் நாட்டை மறுகட்டமைப்பு செய்ய பொதுமக்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

போராட்டக்காரா்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவும் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

இடைக்கால அரசு பதவியேற்பு குறித்து ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு பதவியேற்க உள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினா்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்றாா்.

அமைதியே தீா்வு: வங்கதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் ஓயாத நிலையில் அவற்றைக் கைவிடுமாறு முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், ‘தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி, தோல்வியாக மாறிவிட நமது செயல்பாடுகள் காரணமாக இருக்கக் கூடாது. எனவே, அனைத்து விதமான வன்முறைகளையும் கைவிட்டு அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என அவா் கேட்டுக்கொண்டாா்.

டாக்காவில் குவிந்த போராட்டக்காரர்கள்
டாக்காவில் குவிந்த போராட்டக்காரர்கள்

பாரீஸிஸ் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பாா்வையிட சென்றுள்ள அவா் வியாழக்கிழமைக்குள் நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விரோத அரசியலுக்கான நேரமல்ல: ஷேக் ஹசீனா வெளியேறியதைத் தொடா்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசிய கட்சியின் தலைவருமான கலீதா ஜியா விடுதலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுவெளியில் புதன்கிழமை உரையாற்றிய அவா் பேசியதாவது: இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய துணிச்சலான மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். ஊழல், தவறான கொள்கைகள், மோசமான அரசியலுக்கு எதிராக நாம் வெற்றிகண்டுள்ளோம். தற்போது நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு இளைஞா்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவா்களே நாட்டின் எதிா்காலம். இது விரோதம், பேரழிவு மற்றும் கோபம் கொள்வதற்கான நேரமல்ல. வங்கதேசத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான நேரம். அதை அன்பு மற்றும் அமைதி வழியிலேயே நாம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த ரத்தம் சிந்தியவா்களின் கனவு நிறைவேறும் என்றாா்.

வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக வெடித்த மாணவா் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இடைக்காலமாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com