பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பரிசு மழையில் நனையும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவரது மாமா எருமை மாடு ஒன்றை பரிசளித்துள்ளார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 4:40 pm IST

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று திரும்பிய பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு எருமை மாடு ஒன்றை அவரது மாமனார் முகமது நவாஸ் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், பலரும் பலவகையான பரிசுகளை வழங்க முன்வந்துள்ளனர்.

தங்கம் வென்ற நதீமுக்கு பாகிஸ்தானின் லாகூரில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் தனிநபர் ஒலிம்பிக் சாதனையுடன் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த நதீமுக்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசளித்துள்ளார். பாகிஸ்தானில் எருமை மாடு என்பது மதிப்பு, கௌரவமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. நதீம் மாமனாருக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருப்பதாகவும், அவரது இளைய மகளான ஆயிஷாவுக்கு நதீமை திருமணம் செய்து வைத்ததாகவும் நதீமின் மாமனார் தெரிவித்துள்ளார். நதீம் மற்றும் ஆயிஷா தம்பதிக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அர்ஷத் நதீமுக்கு வழங்கப்பட்ட எருமைமாடு.

அர்ஷத் நதீமுக்கு வழங்கப்பட்ட எருமைமாடு. - படம் | எக்ஸ்

இதுகுறித்து நதீமின் மாமனார் முகமது நவாஸ் கூறுகையில், “பஞ்சாபில் உள்ள கனேவால் கிராமப் பகுதியைச் சேர்ந்த நதீம், தனது ஆரம்ப நாட்களில் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு உள்ளூர் கிராமவாசிகள், உறவினர்கள் பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.

எங்கள் மகளை நதீமுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தபோது, ​​​​அவர் குறைந்த வசதியுடையவராகவே இருந்தார். ஆனால், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது மகள் ஆயிஷாவை நதீமுக்கு திருமணம் முடித்து வைக்க முடிவு செய்தோம். அப்போது நதீம் சிறு, சிறு வேலைகளை பார்த்துக் கொண்டு வயல் வெளிகளில் ஈட்டி எறிதல் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார்.

நதீமுக்கு விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை அவரை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது பெருமிதமாக இருக்கிறது. பாகிஸ்தானில் ஈட்டி எறிதல் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது எதைப்பற்றியும் குறையாக கூறமாட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் உள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவருகின்றனர்” என்றார்.

பரிசுகள்

உலக தடகள கூட்டமைப்பு அர்ஷத் நதீமுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 42 லட்சம்) வழங்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி சுஸுகி ஆல்டோ கார் ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னர் சர்தார் சலீம் ஹைதர் கான், அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 20 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். சிந்து மகாண ஆளுநர் கம்ரான் டெசோரி பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஹ்மத் ஷஜாத் தன்னுடைய அஹ்மத் ஷஜாத் அறக்கட்டளை, ரிப்போர்டேஜ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் சார்பாக ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளார் . 

சிந்து மாகாணத்தின் செய்தித் தொடர்பாளரும், சுக்கூர் மேயருமான பாரிஸ்டர் அர்சலன் இஸ்லாம் ஷேக், தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு தங்க கிரீடம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், சுக்கூரில் கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்திற்கு "அர்ஷத் நதீம் மைதானம்" என்று பெயரிடப்படும் என்றும் கூறினார். 

ஜாஃப்ரியா பேரிடர் மேலாண்மை நல அமைப்பின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புதிய சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார். நதீமுக்கு ஒரு கார், வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருள் வழங்கப்படும் என ‘கோ’ பெட்ரோல் பம்ப் சி.ஓ.ஓ ஜீஷன் தயாப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ரூ. 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, நதீமின் சிறந்த சாதனையைப் பாராட்டி பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய விருதான ஹிலால்-இ-இம்தியாஸைப் பெறுவார் என்றும் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.