
பொதுவாக காய்ச்சல் வந்தால், கை, கால்கள் நடுங்கும். ஆனால், உகாண்டாவில் மக்களுக்குப் பரவி வரும் மர்ம நோயால், நோயாளிகளின் உடல் ஒரு வித நடன அசைவு போல ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த நோய் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில், டிங்கா டிங்கா என்று உள்ளூர் மக்கள் இந்த நோய்க்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக பெண்களையும் சிறுமிகளையுமே இந்த நோய் தாக்குவதாகவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கால் மற்றும் உடலை அசைத்தவாறு அதாவது நடனமாடிக்கொண்டே வருவது போல விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உகாண்டாவின் பண்டிபக்யோ மாவட்டத்தில் இந்த மர்ம நோய் பரவி வருவதாகவும், 300க்கும் மேற்பட்டோருக்கு இது பரவியிருப்பதாகவும், டிங்கா டிங்கா என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, உடல் கட்டுப்பாடின்றி ஆடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, இந்த நோய்க்கான வைரஸ் கண்டறியப்படாததால் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து குணப்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதித்தவர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைவதாகவும் இதுவரை அண்டை மாவட்டங்களுக்கு இந்த நோய் பரவவில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு சிகிச்சையில்லாமலே ஒரு வாரத்தில் குணமடையும் நோயாகவே இது இருப்பதாகவும், இதுவரை உயிர் பலி எதுவும் நிகழவில்ல், கடந்த ஆண்டு இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருவதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்கள், இந்த மர்ம நோயை, பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் 1518 இல் 'டான்சிங் பிளேக்' நோய் பரவலுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
அந்த நோய் தாக்கிய மக்களின் கை, கால்கள் கட்டுப்பாடில்லாமல் பல நாள்கள் வரை ஆடிக்கொண்டிருந்ததும், சில சமயங்களில் அது உடல் சோர்வை ஏற்படுத்தி அதனால் சில மரணங்களும் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை நினைவுகூர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.