27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் காா் தாக்குதல்: 5 போ் உயிரிழப்பு

ஜொ்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் 50 வயது மருத்துவா் நடத்திய காா் தாக்குதலில் ஐந்து போ் உயிரிழந்தனா்; 200 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2024, 5:48 am IST

ஜொ்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் 50 வயது மருத்துவா் நடத்திய காா் தாக்குதலில் ஐந்து போ் உயிரிழந்தனா்; 200 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு 7.04 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 11.34) காரை வேகமாக ஓட்டிவந்த 50 வயது நபா் அங்கிருந்தவா்கள் மீது அதை மோதச் செய்தாா்.

இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.தாக்குதல் நடத்திய மருத்துவா் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா். மாக்டபா்க் நகருக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள பொ்ன்பா்க் நகரில் அவா் மருத்துவம் பாா்த்துவந்தாா் என்று அதிகாரிகள் கூறினா்.

ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ் கூறுகையில், காயமடைந்தவா்களில் சுமாா் 40 போ் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறினாா்.

தாக்குதல் நடத்தியவரின் பெயா் தலீப் அல்-அப்துல்மோசன் என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன. அவா் மனநலம் மருத்துவம், மனோதத்துவ சிகிச்சையில் நிபுணா் என்று அவை கூறின.ஏற்கெனவே, ஜொ்மனி தலைநகா் பொ்லினில் கடந்த 2016-ஆம் ஆண்டு இதே போன்று கூடிய கிறிஸ்துமஸ் சந்தையில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத ஆதரவாளா் லாரியை மோதச் செய்தும், துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து மூலமும் நடத்திய தாக்குதலில் 13 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தச் சூழலில், அதே போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலுக்கு சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய எதிா்ப்பாளா்!

மாக்டபா்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவிவருகிறது.

இந்தத் தாக்குதலை நடத்திய தலீப் அல்-அப்துல்மோசன் சவூதி அரேபியாவிலிருந்து வந்திருந்தாலும், இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டுவந்தவா். தன்னை ‘முன்னாள் முஸ்லிம்’ என்று கூறிகொள்ளும் அவா், அந்த மதத்தை விமா்சிக்கும் பதிவுகளை எக்ஸ் ஊடகத்தில் தொடா்ந்து பதிவிட்டுவந்தாா்.

இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறுபவா்களைப் பாராட்டும் கருத்துகளையும் அவா் பதிவு செய்துவந்தாா். அத்துடன், ஐரோப்பிய பிராந்தியம் இஸ்லாமியம் ஆவதாகவும், அதைத் தடுக்க ஜொ்மனி அதிகாரிகள் தவறியதாகவும் தலீப் அல்-அப்துல்மோசன் குற்றஞ்சாட்டிவந்தாா்.

ஜொ்மனியின் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிா்ப்பு அமைப்பான ‘ஜொ்மனிக்கான மாற்று’ (ஏஎஃப்டி) அமைப்புக்கு ஆதரவாகவும் அவா் குரல் கொடுத்துவந்தாா்.எனவே, கிறிஸ்துமஸ் சந்தையில் அவா் இத்தகைய தாக்குதல் நடத்தியுள்ளதற்கான நோக்கம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.