
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பு விழாவுக்கான நன்கொடையின் மதிப்பு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக ஜனவரி 20 ஆம் தேதியில் வெள்ளை மாளிகையில் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்காக, பல தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த விழாவுக்கான நிதி சேகரிப்பு 150 மில்லியன் டாலர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரையில் 150 மில்லியன் டாலரையும் விஞ்சியுள்ளது. அதுமட்டுமின்றி, தொழிலதிபர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு, நன்கொடை அளித்து வருவதால், நிதி சேகரிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையிலான அமெரிக்க வரலாற்றில், பதவியேற்புக்கான நிதி சேகரிப்பில் டிரம்ப்புக்குதான் அதிகளவில் நன்கொடை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 2024 - லாபம் அளித்த முதல் 10 நிறுவனப் பங்குகள்!!
இதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு ஜோ பைடனின் பதவியேற்பு விழாவுக்கு 63 மில்லியன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே 2017 ஆம் ஆண்டில் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு 107 மில்லியன் டாலர் கிடைத்தது. பராக் ஒபாமா, 2009 ஆம் ஆண்டில் 53 மில்லியனும், 2013 ஆம் ஆண்டில் 42 மில்லியன் டாலரும் பெற்றார்.
ஒரு மில்லியன் டாலருக்குமேல் நன்கொடை அளிப்பவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் 6 நுழைவுச் சீட்டுகளும் வழங்கப்படும். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஓபன் ஏஐ (OpenAI) தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், ஊபர் (Uber), டொயோட்டா, ஃபோர்டு (Ford) முதலான நிறுவனங்களும் தலா ஒரு மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகக் கூறுகின்றனர்.
டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது நிதி அளித்தவர்களும், தற்போது டிரம்ப்பை ஆதரிக்கும் வகையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.