பதின்பருவ பயனர்களுக்குப் பொருத்தமற்ற விஷயங்களான சுயவதை, தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றைக் குறித்த பதிவுகள் இனி அவர்களுக்குக் காட்டப்படாது என மெட்டா அறிவித்துள்ளது.
கலிபோர்னியவை மையமாகக் கொண்டுள்ள மெட்டா குழுமம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பிரபல சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது.
மெட்டா தனது வலைதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிட்ட குறிப்பில், பதின்பருவத்தினருக்கு ஏற்கெனவே அவர்களுக்குப் பொருத்தமற்ற விடியோக்களை மெட்டா காண்பிப்பத்தில்லை எனவும் தற்போது அவர்கள் பின்தொடர்கிற பக்கங்களில் இருந்து அது போலான விடியோக்களோ பதிவுகளோ வெளியிடப்பட்டாலும் இனி காண்பிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “வயதுக்கேற்ற அனுபவங்களும் பாதுகாப்பும் பதின்பருவத்தினருக்கு அளிப்பதே நாங்கள் விரும்புவதும்” என மெட்டா குறிப்பிட்டுள்ளது.
சுய வதை மற்றும் தற்கொலை எண்ணங்கள், உணவு தொடர்பான ஒழுங்கற்ற விருப்பங்கள் ஆகிய தலைப்புகளிலான பதிவுகள் பதின்பருவத்தினருக்கு காண்பிக்கப்படாது என மெட்டா குறிப்பிட்டுள்ள அறிவிப்பு, 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்கள் மெட்டா குழுமத்தின்மீது தொடர்ந்த வழக்குக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
மெட்டா- பதின்பருவத்தினரை, இளைஞர்களை ஈர்க்கும் விஷயங்களை அது அவர்களின் மனநலனைப் பாதிக்கும் எனத் தெரிந்தே வேண்டுமென்றே தனது ஆப்களில் நிரலை வடிவமைத்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில் மெட்டா வெளியிட்டுள்ள குறிப்பை விமர்சித்துள்ள சமூக ஆர்வலர்கள், தற்கொலை மற்றும் உணவின் மீதான ஒழுங்கற்ற விருப்பத்தைத் தூண்டும் பதிவுகளை மெட்டாவால் கட்டுப்படுத்த முடியுமெனில் இதனை செய்ய 2024 ஆம் ஆண்டு வரை காத்திருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க: ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 200ஐ தாண்டியது!
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களின் பெரும்பாலான பயனர்கள் இளைஞர்களாகவும் பதின்பருவத்தினராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.