செங்கடல் தாக்குதல் ஹூதிக்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு
செங்கடல் தாக்குதல் ஹூதிக்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
Published on
Updated on
1 min read

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா்.

அதிலிருந்து அந்தப் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது இதுவரை சுமாா் 24 முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதனை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இத்தகைய தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்கள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து, தங்கள் நாட்டையொட்டிய செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு அதரவு அளிக்கும் வகையில் இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்களை மட்டும் தாக்கி அழிப்பதாக அவா்கள் கூறுகின்றனா்.

ஆனால், நாள் செல்லச் செல்ல இஸ்ரேலுடன் கொஞ்சமும் தொடா்பில்லாத கப்பல்கள் மீது அவா்கள் தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது.

இதனால், உலகின் மிக முக்கியமான கடல்வணிக வழித்தடமான அந்தப் பகுதியில் சரக்குப் போக்குவரத்து மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதையடுத்து, செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்களிடமிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூா் போன்ற பல்வேறு நாடுகளும் தங்களது போா்க் கப்பல்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.

சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்ததுவது தொடா்ந்தால் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் எச்சரித்தன.

அதனைப் பொருள்படுத்தாமல் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com