ஆஸ்கார் வெற்றிபெற்ற ‘பாராசைட்’ படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹோ மற்றும் மற்ற தென்கொரியா நடிகர்கள் மறைந்த லீ சன் யுன் இறப்பில் காவல்துறை மற்றும் செய்தி நிறுவங்களின் நடத்தை குறித்து விசாரணையைக் கோரியுள்ளனர்.
போங்கின் 2019-ல் வெளிவந்த ‘பாராசைட்’ படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் லீ சன் யுன், கடந்த மாதம் சியோலில் காரில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அதற்கு முன்பான இரண்டு மாதங்களாக அவர் போதை பொருள் வழக்கின் விசாரணையில் இருந்தார்.
இந்த நிலையில், அவரது இறப்புக்குப் பிறகு காவல்துறை விசாரணையின் தகவல்களைக் கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. செய்தி நிறுவனங்கள் மறைந்த நடிகர் குறித்து அவதூறு பரப்பும்வகையில் செய்தி வெளியிட்டதாகவும் இயக்குநர் உள்பட தென்கொரிய திரைப்பட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது குறித்து பேசும்போது, “விசாரணையின்போது காவல் துறையின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்” என போங் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரபூர்வமற்ற தகவல் கசிவு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சீனாவின் ஏற்றுமதி சரிவு
தென்கொரியாவில் போதை பொருள்கள் சட்டவிரோதமானது. லீயின் இறப்பு மற்றும் அதன் பிறகான சம்பவங்கள், காவல்துறை மற்றும் செய்தி நிறுவனங்கள் மீது விமர்சனங்கள் எழக் காரணமாக அமைந்துள்ளன.