கணினிக்கும் மனித மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டாக்கும் சிப், மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு நாளுக்கு முன்பாக நோயாளி ஒருவருக்கு சிப் பொருத்தப்பட்டதாகவும் அந்த நபர் முன்னேறி வருவதாகவும் மூளையின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கையூட்டும் தரவுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்கின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்று மனித மூளை உருவாக்கும் எண்ணங்களைக் கொண்டே கணினிக்கு கட்டளை பிறப்பிப்பது.
நியூரோலிங் என்கிற அவரது நிறுவனம் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. எலான் மஸ்கின் பதிவை பகிர்ந்த நியூரோலிங் சிப் பொருத்தப்பட்ட மனிதர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
இந்த கண்டுபிடிப்புக்கு ‘டெலிபதி’ எனப் பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது முதல் பயனர்களாக இருப்பர் என எலான் தெரிவித்துள்ளார்.
இந்த கருவிகள், எத்தனை தூரம் பயனர் இடைமுகமாக பயன்படும் என்பது குறித்தோ அல்லது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லை.
இன்னும் 40-க்கும் அதிகமான நிறுவனங்கள் இதே தளத்தில் ஆய்வு செய்து வந்தபோதும் எலானின் நோக்கம் பலருக்கு விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
மஸ்க் இது குறித்து பேசும்போது மனிதர்கள் தங்களைச் சுற்றி நடப்பதை எப்போதும் பதிவு செய்துகொள்ள இந்த சிப் உதவும் எனத் தெரிவித்தார். இது மற்றவரின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என பலர் விமர்சித்தனர்.
இதையும் படிக்க: கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்!
இருந்தபோதும் நவீன அறிவியலின் வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.