
உக்ரைன் - ரஷியா போரை நிறுத்துவதற்கு ரஷியா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதினுடன் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உக்ரைன் போர் குறித்து பேசிய மோடி, “அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. உக்ரைன் பிரச்னைக்கு போர் தீர்வல்ல, போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மோடி - புதின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
”உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம்.
ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. போரை தொடங்கிய புதினால், அதனை முடிக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மார்கரெட் மேக்லியோட்,
“இந்தியாவும் ரஷியாவும் மிகவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. போருக்கு எதிராக ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். உக்ரைனில் ரஷியாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.