வாஷிங்டன்: கனடாவிலிருந்து, அமெரிக்கா வழியாகச் செல்லும் சரக்கு ரயிலில் வந்து, நியூ யார்க் நகருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓடும் சரக்கு ரயிலிலிருந்து குதித்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர்கள் கைதாகியுள்ளனர்.
மார்ச் 12ஆம் தேதி ஒரு பெண் உள்பட நான்கு பேரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்திருக்கிறது. அனைவரிடமும் எந்த ஆவணங்களும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடும் சரக்கு ரயிலிலிருந்து நான்கு பேர் குதித்ததை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை கைது செய்திருக்கிறது.
சரக்கு ரயிலிலிருந்து குதித்தபோது, காலில் காயமடைந்து பெண்ணால் நடக்க முடியாமல் போன நிலையில் அவருடன் வந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். ஆனால், அவரையும் காவல்துறையினர் பிடித்துவிட்டனர். காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணும் அவருடன் வந்த இரண்டு ஆண்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.