தென்னாப்ரிக்காவில் வடக்கு-கிழக்கு லிம்போபோ மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், 45 பேர் பலியாகினர். அதில் பயணித்த 8 வயது சிறுமி ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
லிம்போபோ மாகாணத்தில், பயணிகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 165 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்து தரையில் விழுந்த வேகத்தில் பேருந்து முழுக்க தீப்பற்றியது. இதில், பேருந்தில் பயணித்த 45 பேரும் பலியாகினர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், பேருந்து, பாலத் தடுப்பில் மோதி கீழே விழுந்த போது, பேருந்துக்குள் இருந்த சிறுமி தவறி வெளியே விழுந்திருப்பார் என்றும், அதனால்தான், பேருந்தோடு கீழே விழுந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 35 உடல்கள் இதுவரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதில் வெறும் 9 உடல்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெறும் உடல் பாகங்கள் மட்டும் ஏராளமாகக் கிடைத்திருப்பதாகவும் அதனை அடையாளம் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போட்ஸ்வானா தலைநகரிலிருந்து ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட மோரியா சென்ற பக்தர்கள் பேருந்துதான் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.