மெக்ஸிகோ நாட்டின் சுற்றுலா நகரமான டாக்ஸ்கோவில் குழந்தையை கடத்தி கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணை ஆத்திரமடைந்த மக்கள் குழு தாக்கியுள்ளனர்.
கிறிஸ்துவர்களின் புனித வாரத்துக்கான கொண்டாட்ட ஏற்பாட்டுக்கு நகரம் தயாராகி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக புதன்கிழமை 8 வயது பெண் குழந்தை காணாமல் போனது, நகரின் எல்லையில் வியாழக்கிழமை நாளின் தொடக்கத்தில் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணும் ஆணும் வெள்ளை நிறத்துணியால் கட்டப்பட்ட மூட்டையை காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அந்த குழந்தையின் உடலாக அது இருக்கக்கூடும் என சந்தேகித்த மக்கள் அந்த விடியோவில் பதிவான பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே இழுக்க முயற்சித்துள்ளனர்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சந்தேகத்துக்குரிய பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல் டிரக்கில் இருந்து பெண்ணை இழுத்து சரமாரியாக தாக்கியது.
குற்றம் சுமத்தப்பட்ட பெண் மற்றும் இரு ஆண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு காவலர்களால் அழைத்து செல்லப்பட்டனர். காயமடைந்த பெண் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, “மோசமான அரசு இருப்பதனால் உண்டாகும் விளைவு இது. இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. ஆனால் இந்த முறை மக்கள் அதற்கு தீர்வளித்துள்ளனர்” என மக்கள் திரளில் இருந்த ஆன்ட்ரியா என்பவர் ஏபி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் உள்புற பகுதிகளில் கும்பல் தாக்குதல் நடப்பது வழக்கமானது. சுற்றுலா நகரமான டாக்ஸ்கோவில் இதுபோன்ற வன்முறை வெடிப்பது இதுவே முதன்முறை.
இது குறித்து டாக்ஸ்கோ நகர மேயர் தனக்கு மாநில அரசு போதிய காவல் பலம் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.