வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ‘களிப் படை’ (பிளஷர் ஸ்குவாட்) குறித்த மர்ம தகவல்களை அங்கிருந்து தப்பி வந்த யோன்மி பார்க் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா, உலகில் இருந்து தனித்து செயல்படும் நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டின் ராணுவ மற்றும் ராஜ்ய விவகாரங்கள் பெரும்பாலும் ரகசியமாக காக்கப்படுகின்றன.
இந்த நிலையில் யோன்மி பார்க் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தரங்கத்தைத் தெரிவிப்பதாகவுள்ளது.
மிரர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளப்படி யோன்மி தெரிவித்ததாவது:
அவர்கள் ஒவ்வொரு வகுப்பறையையும் பள்ளி வளாகத்தையும் பார்வையிடுவார்கள். அழகான பெண்களைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக. அழகான பெண்களைக் கண்டுபிடித்தவுடன் முதலில் அந்த பெண்களின் குடும்ப நிலையையும் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்வார்கள். வட கொரியாவில் இருந்து தப்பிப் போன குடும்ப உறுப்பினர்களோ அல்லது தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உறவினர்கள் உள்ள குடும்ப பெண்களையோ அவர்கள் விட்டுவிடுவார்கள்.
இப்படி தேர்வு செய்யப்படுகிற பெண்களின் வேலை என்பது அதிபரை அனைத்து வகைகளிலும் மகிழ்விப்பது என யோன்மி குறிப்பிடுகிறார்.
ஆண்டுதோறும் 25 பெண்கள் அதற்காக தேர்வு செய்யப்படுவதாகவும் அவர்களின் மருத்துவ சோதனைகளுக்கு பிறகு பியோங்யாங் நகருக்கு அவர்கள் இடம்மாற்றம் செய்யப்படுவதாகவும் யோன்மி தெரிவித்துள்ளார்.
மசாஜ் அளிப்பதற்கு ஒரு குழுவாகவும் ஆடிப் பாட ஒரு குழுவாகவும் பாலியல் செயல்களுக்கு ஒரு குழுவாகவும் இவர்கள் பிரிக்கப்படுவர் எனவும் அதிபரை மட்டுமில்லாமல் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களையும் இந்த பெண்கள் மகிழ்விக்க வேண்டியிருக்கும் எனவும் யோன்மி தெரிவிக்கிறார்.
தான் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டதாகவும் தனது குடும்ப நிலை காரணமாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயல், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜோங்- II காலத்தில் 1970-களில் உருவாகியதாகவும் அவர் இளம்பெண்களுடன் பாலியல் உறவு கொண்டால் மரணத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என நம்பியதாகவும் யோன்மி கூறுகிறார்.
2011-ம் ஆண்டு கிம் ஜோங்- II தனது 70 வயதில் மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.