எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அதன் இணை நிறுவனர் டாக்டர். பெஞ்சமின் ரபோபோர்ட் நியூராலிங்கில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் பாதுகாப்பின்மை குறித்தும் தான் நிறுவனத்திலிருந்து விலகியது குறித்தும் பேசியுள்ளார்.
மனித மூளை மூலமாக தொழில்நுட்பக் கருவிகளுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஆய்வு செய்துவருகிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம்.
‘தி பியூச்சர் ஆப் எவ்ரிதிங்‘ என்கிற தலைப்பிலான போட்காஸ்டில் டாக்டர் பெஞ்சமின் பேசியுள்ளார்.
அதில் நியூரோலிங் நிறுவனத்தில் மூளைக்குள் செலுத்தப்படும் நுண்ணிய எலெக்ட்ரோட்ஸ் மூளைக்கு ஆபத்து விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மாற்றாக தான் புதிதாக உருவாக்கியுள்ள ப்ரீசிஸன் நியூராசயின்ஸ் நிறுவனத்தின் ஆய்வு, வேறுபட்ட எலெக்ரோட்ஸை உபயோகிப்பதாகவும் அவை மூளைக்குள் ஊடுருவி செல்வதில்லை எனவும் அதனால் பாதிப்பு மற்றும் அபாயத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, “எனது ஒட்டுமொத்த தொழில்வாழ்க்கையையும் மருத்துவ உலகத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதில் செலவிட்டுள்ளேன். என்னை பொருத்தவரை மருத்துவ உபகரணத்துக்கு பாதுகாப்பு மிக முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் கனவுத் திட்டங்களில் ஒன்றான நியூராலிங்கின் ஆராய்ச்சியில் சமீபத்தில் மனிதர் ஒருவருக்குப் பொருத்தி முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதன் பாதுகாப்பு குறித்து முன்னாள் இணை நிறுவனர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.