பூவின் தேனை தேடும் தேனீக்கள் போல டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசையைத் தேடி நாடு விட்டு நாடு பறந்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஐரோப்பாவின் 18 நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ள ‘எராஸ் டூர்’ இசை நிகழ்வு வியாழக்கிழமை பாரிஸில் தொடங்குகிறது.
அமெரிக்காவின் டிக்கெட் விலையைக் காட்டிலும் இங்கு டிக்கெட் விலை குறைவாக இருப்பதால் ஆயிரக்கணக்கான அமெரிக்க ரசிகர்கள் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்வைக் காண ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர்.
பாரிஸில் விற்றுத் தீர்க்கப்பட்ட நான்கு இசை நிகழ்வுகளுக்கான ஒட்டுமொத்த டிக்கெட்களில் 20 சதவிகிதத்தை அமெரிக்கர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அடுத்த நிகழ்வு நடைபெறும் ஸ்டாக்ஹோம் நகரிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமெரிக்காவில் இருந்து வருகை தரவுள்ளனர்.
ஐரோப்பாவில் டிக்கெட் விலை மீது கட்டுப்பாடு மற்றும் மீண்டும் வாங்கி விற்றல் தடை ஆகியவை நிலவுவதால் குறைந்த விலைக்கு டிக்கெட் கிடைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஸ்டாக்ஹோமில் 10 ஆயிரம் அமெரிக்கர்கள் உள்பட 1,20,000 ரசிகர்கள் 130 நாடுகளில் இருந்து டெய்லரின் இசை நிகழ்வைக் காண வரவுள்ளனர்.
இசை நிகழ்வுக்கு மக்கள் வருவதற்காக, அருகிலுள்ள டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வேயில் இருந்து ஸ்டாக்ஹோம் நகருக்குக் கூடுதல் விமானங்கள், மே 17-19 தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
நகரில் உள்ள 40 ஆயிரம் ஹோட்டல் அறைகளும், அதிக விலை நிர்ணயிக்கப்பட்டபோதும் முன்பதிவாகியுள்ளது. டிக்கெட் விலை, பயணச்செலவு சேர்க்காமல் 46 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 384 கோடி ரூபாய்) அளவுக்கு நகரின் பொருளாதாரத்தை டெய்லரின் இசை கச்சேரி உயர்த்தியுள்ளது.
ஒட்டுமொத்த குடும்பத்தின் சுற்றுலாவுக்கான பட்ஜெட்டை டெய்லரின் நிகழ்ச்சியைக் காண மட்டுமே செலவழிப்பது ஒழுங்கின்மை என நாஷ்வில்லே நகரில் செயல்படுகிற பயண ஆலோசகர் கேட் மோர்கா ஏபிக்குத் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, டெய்லரின் ‘பக்தர்கள்’ (இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்) அவர் செல்லுமிடமெல்லாம் காணச் செல்ல தயாராகவுள்ளனர்.