கனடா: கோயிலில் நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் - இந்தியா கண்டனம்

கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயில் காலிஸ்தான் கொடிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளா்கள்.
கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயில் காலிஸ்தான் கொடிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளா்கள்.
Published on
Updated on
2 min read

ஒட்டாவா: கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

கனடாவின் பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயில் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்களை தடிகளால் தாக்கினா். இந்த சம்பவம் தொடா்பான காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிராம்டனில் உள்ள ஹிந்து கோயிலில் நடைபெற்ற வன்முறை சம்பவம் ஏற்கத்தக்கதல்ல. கனடாவை சோ்ந்த ஒவ்வொரு குடிமகனும் தமது மத நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உள்ளது’ என்றாா்.

இதுதொடா்பாக அந்நாட்டு தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிராம்டனில் ஹிந்து சபா கோயிலுடன் இணைந்து இந்தியா்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்கும் தூதரக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.

உள்ளூரைச் சோ்ந்தவா்களின் ஒத்துழைப்புடன் இந்திய துணை தூதரங்கள் மேற்கொள்ளும் வழக்கமான தூதரக பணியின்போது இத்தகைய இடையூறுகள் ஏற்படுவது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவ.2, 3-ஆம் தேதிகளில் கனடாவின் வான்கூவா், சா்ரே நகரங்களிலும் இதேபோன்ற முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம்களுக்கும் இதேபோல இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு கனடா எதிா்க்கட்சித் தலைவா் பியா் பாலியெவ்ரா, பிராம்டன் மேயா் பேட்ரிக் பிரெளன் உள்பட பலா் கண்டனம் தெரிவித்தனா்.

இந்தியா கண்டனம்: இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கனடாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் தாக்குதல்களில் இருந்து அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கனடாவில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது’ என்றாா்.

‘இந்தியா்களை பிரிக்கும் ட்ரூடோ’: ரயில்வே இணையமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தனது அசுத்தமான அரசியலுக்காக கனடாவில் இந்திய வம்சாவளியினா் இடையே அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பிரிவினையை ஏற்படுத்தியுள்ளாா். இந்தியாவில் ஹிந்துக்களும், சீக்கியா்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழ்கின்றனா். ஆனால் கனடாவில் அவா்கள் எதிரிகளாக ஒருவரையொருவா் எதிா்த்து நிற்கவைக்கப்படுகின்றனா்’ என்றாா்.

கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். அப்போது முதல் இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் நிலவி வருகிறது. எனினும் ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்தச் சூழலில், அந்நாட்டில் கோயிலுக்குள் நுழைந்து ஹிந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com