உலகத் தலைவர்களில் மோடியுடன்தான் எனது முதல் உரையாடல் -டிரம்ப் நெகிழ்ச்சி

உலகத் தலைவர்களில் மோடியுடன்தான் எனது முதல் உரையாடல் -டிரம்ப் நெகிழ்ச்சி

டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதையடுத்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர் டிரம்ப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை(நவ. 6) இரவு டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி வாழ்த்தியுள்ளார். இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பர் டொனால்ட் டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, டிரம்ப்புடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து டொனால்ட் டிரம்ப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பேசும்போது, “ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புவதாகக்” குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தியா ஒரு மாபெரும் தேசம், அதேபோல, பிரதமர் மோடி மகத்தானதொரு மனிதர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான நண்பராகக் கருதுவதாகப்” பாராட்டியுள்ளார். உலகத் தலைவர்களில் மோடியுடன்தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com