இலங்கை: முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவு
இலங்கையில் பல முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க அந்நாட்டின் புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் முடிவு காணப்படாத கடந்த கால வழக்குகள் குறித்து மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று புதிதாக ஆட்சியமைத்துள்ள அதிபா் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு 11 இந்தியா்கள் உள்பட 270-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதல்கள், 2015-ஆம் ஆண்டு மத்திய வங்கி பத்திரங்களில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக அப்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அரசு மீது எழுந்த குற்றச்சாட்டு, 2011-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 2 அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளா்கள் மாயமான சம்பவம், 2006-ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குத் தலைமை தாங்கிய தமிழ்க் கல்வியாளா் கடத்தப்பட்டு மாயமான சம்பவம், 2005-ஆம் ஆண்டு தமிழ் இதழியலாளா் சிவராம் கொல்லப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகள் குறித்து மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு காவல் துறை தலைவருக்கு (பொறுப்பு) பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் நிஹால் தல்துவ தெரிவித்தாா்.
