நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அலாஸ்கா விமானத்திலிருந்து அவசர கதவு தெறித்து விழுந்த நிகழ்வு குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விமானம் புறப்படுவதற்கு முன்பே கதவைப் பொருத்தியிருந்த திருகுகள் (போல்ட்ஸ்) அதன் இடங்களில் இல்லாமல் போனதா என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் திருகுகள் நழுவியதே கதவு தெறித்து விழுவதற்கான காரணமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் அலாஸ்கா மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விழுந்த கதவைக் கண்டறிந்துள்ள நிலையில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை வெளியிடப்பட்டது.
கதவு முறையாக பொருத்தப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக யுனைடட் நிறுவனம் ஆரம்பகட்ட ஆய்வில் தெரிவித்தது.
சோதனையின்போது சில விமானங்களில் தளர்ந்த உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அலாஸ்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு நெறிமுறைகளின்படி 200 இருக்கைகளுக்கு அதிகமாக உள்ள விமானங்களில் அவசர கதவுகள் பொருத்தப்படவேண்டும்.
அலாஸ்கா மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் உபயோகிக்கிற போயிங் விமானத்தில் 180 இருக்கைகளே உள்ள நிலையில் ஒரு அவசரகால கதவுக்கான இடம் மட்டுமே உள்ளது. அந்த இடத்தில் நிரந்தரமாக கதவு போன்ற ஒன்றை பொருத்துகிறார்கள்.
இதனை பராமரிப்பு பணியின்போது திறக்கிறார்கள். விமானம் பறக்கும்போது கதவு நழுவாமல் இருக்க திருகுகள் உபயோகிக்கப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை இரவு விமானத்திலிருந்து கதவின் மேற்பகுதியைப் பற்றியிருந்த பொருத்திகளில் ஒன்று (பிளக்) உடைந்ததால் கதவை விமானத்தின் உடல்பகுதியோடு தாங்கியிருந்த 12 இணைப்புகளும் உடைந்து விழுந்திருக்கின்றன.
கதவில் பொருத்தப்பட்ட நான்கு திருகுகள் விமானம் புறப்படுவதற்கு முன்பே இல்லாமல் போனதா அல்லது இந்த விபத்தின்போது கழன்றனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானத்தின் உள்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 171 பயணிகளும் 6 பேர் கொண்ட விமானக் குழுவும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
இந்த நிலையில் மேக்ஸ் 9 விமானங்களைத் தயாரிக்கிற போயிங் நிறுவனத்துக்கு அழுத்தம் உருவாகியுள்ளது. அந்த நிறுவனம் தனது பணியாளர்களை காணொலி கூட்டம் மூலமாக ஒருங்கிணைத்து பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.