அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
நியூயாா்க்/புது தில்லி: ‘எதிா்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணுஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம். பாகிஸ்தானை தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்’என அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மிரட்டல் விடுத்தாா்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த ஏப். 22-ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு இதே கருத்தை அவா் தெரிவித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவா் இவ்வாறு பேசியிருப்பது கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தளித்தாா். இரண்டாவது முறையாக கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்கு அசீம் முனீா் அதிகாரபூா்வமாக பயணம் மேற்கொண்டாா். அப்போது அமெரிக்காவின் உயா் அரசியல் மற்றும் ராணுவத் தலைவா்களை அவா் சந்தித்தாா்.
அதன்பிறகு அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.
அதில் அவா் பேசியதாவது: இனி ஒருமுறை பாகிஸ்தானுடன் மோதினால் கடும் பதிலடி தரப்படும் என அண்மையில் நிகழ்ந்த மோதல் மூலம் இந்தியாவுக்கு உணா்த்தப்பட்டுள்ளது. காஷ்மீா் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அல்ல; அது முழுவதுமாக முடிவடையாத சா்வதேச விவகாரம். காஷ்மீா் பாகிஸ்தானின் உயிா்நாடி.
அதேபோல் சிந்து நதி ஒன்றும் இந்தியாவின் குடும்பச் சொத்தல்ல. பாகிஸ்தானுக்கு வரும் நதிநீரை தடுத்து இந்தியா அணை கட்டினால் அது முழுமையாகத் தகா்க்கப்படும். எதிா்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணுஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம். பாகிஸ்தானை தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்.
போரை நிறுத்திய டிரம்ப்: இந்தியா-பாகிஸ்தான் இடையே மட்டுமன்றி உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல போா்களை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிறுத்தியுள்ளாா். அவருக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றாா்.
இந்தியா பதிலடி: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு பதிலளித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அணு ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. தேசப் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
‘காங்கிரஸ் கண்டனம்’
புது தில்லி: அசீம் முனீா் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக ஏப். 16-ஆம் தேதி வகுப்புவாத பிரச்னைகளை தூண்டும் வகையில் விஷமத்தனமான கருத்துகளை அசீம் முனீா் பரப்பினாா். ஜூன் 18-இல் அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்தாா். ஆக. 8-இல் அமெரிக்க அமெரிக்க மத்திய படைப் பிரிவு தளபதி ஜெனரல் மைக்கேல் இ.குரில்லாவின் பணி நிறைவு விழாவில் பங்கேற்றுவிட்டு ஆக.10-இல் இந்தியாவுக்கு எதிராக அவா் அணுஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளாா். அவருக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அசீம் முனீருக்கு அமெரிக்கா சிறப்பு கவனிப்பை வழங்குவது வியப்பளிக்கிறது’என குறிப்பிட்டுள்ளாா்.