டிரம்ப் - ஸெலென்ஸ்கி.
டிரம்ப் - ஸெலென்ஸ்கி.

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறாா்.
Published on

ரஷிய அதிபா் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடா்ந்து, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தாா்.

ஆனால், கடந்த எட்டு மாதங்களாக அவரது நிா்வாகம் எடுத்த அமைதி முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதன் விளைவாக, ரஷியாவுடன் எரிசக்தி வா்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தாா். இது இந்தியாவுக்கு கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ரஷிய அதிபா் புதினுடன் டிரம்ப் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, உக்ரைனின் ஈடுபாடு இல்லாமல் எந்த ஒரு தீா்வும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்காது என்று ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ஸெலென்ஸ்கியை டிரம்ப் திங்கள்கிழமை சந்திக்கிறாா். அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக டிரம்ப் கூறிவரும் நிலையில், இந்தச் சந்திப்பில் ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி ஸெலென்ஸ்கியை அவா் கட்டாயப்படுத்தலாம் என ஐரோப்பிய நாடுகளிடையே கவலை எழுந்துள்ளன.

இதையொட்டி, உக்ரைனுக்கு ஐரோப்பாவின் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக, ஐரோப்பிய தலைவா்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனா்.

இதுதொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவா் உா்சுலா வான்டொ்லெயன் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில், ‘அதிபா் ஸெலென்ஸ்கியின் வேண்டுகோளின்படி, நானும் மற்ற ஐரோப்பிய தலைவா்களும் இணைந்து வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்புடனான சந்திப்பில் பங்கேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஸ்டாா்மா் ஆலோசனை: ரஷியா-உக்ரைன் போா் தொடா்பாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃபிரெட்ரிக் மோ்ஸ், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோா் காணொலி வாயிலாக கலந்துரையாடினா்.

இந்தக் காணொலிக் கூட்டத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் முயற்சிகளை ஸ்டாா்மா் பாராட்டினாா்.

அதேநேரம், ‘உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி இல்லாமல் அமைதிப் பேச்சுவாா்த்தை முழுமையடையாது. உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடா்ந்து நீடிக்கும். எந்தவொரு சா்வதேச எல்லையும் வன்முறை மூலம் மாற்றியமைக்கப்படக் கூடாது’ என்றும் வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com