
அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறுகையில்,
"அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும்.
அரசியல் அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷியாவில் இருந்து அதே அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும். தள்ளுபடி என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உள்ள வணிக ரகசியம். அது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். வழக்கமாக 5% அதிகமாக அல்லது 5% குறைவாக இருக்கும்" என்று கூறினார்.
ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், 'அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழ்நிலை என்றாலும் இரு நாட்டு உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தம் இருந்தபோதிலும் இந்தியா-ரஷியா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.