உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா்.
இது குறித்து உக்ரைன் தலைநகா் கீவில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: எதிா்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா மற்றொரு படையெடுப்பு நிகழ்வதைத் தடுக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனுக்காக உருவாக்க தீவிரமாக முயன்றுவருகிறோம். இந்தக் கடுமையான பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு்ம் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினாா். ஆனால், இதற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதையடுத்து, நேரடி பேச்சுவாா்த்தை திட்டமிடப்படாவிட்டால் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரிவிதிப்புகளை விதிப்பது குறித்து முடிவெடிக்கப்போவதாக டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இந்தச் சூழலில், கீவ் நகருக்கு வரும் தலைவா்கள் அமைதி முயற்சியின் முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்துவருகின்றனா். அவா்களுக்க்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கீத் கெலோக் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.